மன்னாரில் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த மாணவிகள் இருவர் கலைப்பிரிவில் சாதனை!!

2396

மன்னாரில்..

வெளியாகியுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமாகக் காணப்படும் மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் கலைப்பிரிவில் மன்னார் மாவட்ட மட்டத்தில் 1 ஆம் மற்றும் 4ஆம் இடத்தை பெற்று மடுக்கரை கிராமத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவிகளான ஜெயரத்தினம் ஜெயப்பிரதா கலைப்பிரிவில் 3 எ சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தினையும், இராமநாதன் புஸ்பலீனா கலைப்பிரிவில் 2 A, B பெறுபேறுகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி உள்ளனர்.

குறித்த மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து, மிகவும் தூரப் பிரதேசமாக இருக்கும் தங்களுடைய கிராமத்திலிருந்து நானாட்டான் பிரதேசத்தில் உள்ள டிலாசால் கல்லூரிக்குச் சென்று கல்வி கற்றுள்ளனர்.

குடும்பத்தில் உள்ள வறுமை ஒரு தடை இல்லை என்று மாவட்ட மட்டத்தில் சிறந்த இடத்தை பெற்று தங்களுடைய கிராமத்திற்கும் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.