முகக்கவசம் அணிந்தது போல் Prank செய்த இரண்டு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

6539

பாலித் தீவு…

இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா சென்ற இரண்டு பெண்கள், முகக் கவசம் அணிந்ததுபோல் பெயிண்ட் அடித்துக்கொண்டு Prank செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. முதல் அலையில் குறைவான பாதிப்பை மட்டுமே எதிர்கொண்ட இந்தியா 2வது அலையில் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா சென்ற இரண்டு பெண்கள், முகக் கவசம் அணிந்ததுபோல் பெயிண்ட் அடித்துக்கொண்டு Prank செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினர்.

இணையத்தில் வைரலான அந்த வீடியோ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளான அந்த பெண்களின் பாஸ்போர்ட்டை பாலித் தீவில் உள்ள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜோஸ் பலேர் லின் (Josh Paler Lin), லியா சே (Leia Se) இருவரும் பாலித்தீவுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு முகக்கவசம் அணியாமல் சென்ற அவர்களை, பாதுகாவலர் திருப்பி அனுப்புகிறார்.

காருக்கு வரும் அவர்கள் இருவரும் முகக் கவசம் அணிந்ததுபோல் பெயிண்ட் அடித்துக்கொண்டு மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகின்றனர். அவர்கள் பேசாதவரை, இருவரும் முகக்கவசம் அணிந்திருப்பது போல் தெரிகிறது.

பாதுகாவலரை ஏமாற்றி சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையும் அவர்கள், நடந்த அனைத்து விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினர்.

இரு பெண்களின் வீடியோ இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் ஜோஸ் பலேர் லின் (Josh Paler Lin), லியா சே (Leia Se) ஆகியோரின் பாஸ்போர்ட்டை பாலி அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து மற்றொரு வீடியோவில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ள அவர்கள், தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளனர். இணையத்தில் பிரபலமாக இருப்பதால், தங்களை பின்தொடர்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த இதுபோன்று தவறான செயலில் ஈடுபட்டுவிட்டதாகவும்,

இதனை மன்னிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக சுற்றுலாப் பெண்கள் இருவருக்கும் இந்தோனேஷிய ரூபாயில் 1 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனா விதிமுறைகளை மீறிய சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே அபராதம் வசூலிக்கப்பட்டது. டெல்லியிலும் கொரோனா ஊரடங்கை மதிக்காமல் காரில் சுற்றித்திரிந்த தம்பதியினருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.