7ம் திகதியின் பின்னரும் பயணத்தடை நீடிக்கப்படுமா? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

3033


பயணத்தடை..



ஜுன் 07ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து உரிய மீளாய்வின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.



கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை ஜுன் 7ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




அதன் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகள் தொடருமா என்பது குறித்து இன்னும் எதுவும் அறிவிக்கப்படவில்லை என வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,


நாட்டில் தற்போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளின் விளைவாகவே இந்தப் பெறுபேறு கிடைத்துள்ளது.

தற்போது தொடர் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பெறுபேறுகளை 14 நாட்களுக்குப் பின்னரே அறியக்கூடியதாக இருக்கும். அதற்காக நாம் தற்போது சும்மா இருக்கவில்லை.


நிலைமை நாளாந்தம் மீளாய்வு செய்யப்படுகின்றது. நாட்டின் தற்போதைய நிலை, அடுத்து சில நாட்களில் ஏற்படும் நிலை, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் வீதம், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே, எதிர்வரும் 07ஆம் திகதிக்கு பின்னரான காலம் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

-தமிழ்வின்-