வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 5 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் விடுவிப்பு!!

3977


வர்த்தக நிலையங்கள்..



வவுனியாவில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக மூடப்பட்ட 5 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் விடுவிக்கப்பட்டதுடன், நிபந்தனைகளின் அடிப்படையில் வீடுகளுக்கு கொண்டு சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் இன்று (09.06) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளை பெறும் வகையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்குவதற்கு பிரதேச செயலங்கள் ஊடாக சில வர்த்தக நிலையங்களுக்கு (பாஸ்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




இந்நிலையில், வவுனியா பிரதேச செயலகம் ஊடாக வீடு வீடாக பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி பெற்றுக் கொண்ட வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விசேட சோதனை நடத்திய சுகாதாரப் பிரிவினர்,


பண்டாரிகுளம் பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்ட வர்ததக நிலையங்கள் மற்றும் வீடு வீடாக பொருட்களை வழங்குவதற்கு வழங்காப்பட்ட அனுமதியை முறைகேடாக பயன்படுத்திய வர்த்த நிலையங்கள் என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது பலசரக்கு வியாபார நிலையம் நான்கு, பாண் விற்பனை நிலையம் ஒன்று என 5 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.09) மூடப்பட்டதுடன், குறித்த வர்த்தக நிலையங்கள் 14 நாட்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன.


இந்நிலையில், அப்பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள இடர்பாடுகளை எதிர்நோக்கிய நிலையில் பண்டாரிகுளம் பொது அமைப்புக்கள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக,

குறித்த வர்த்த நிலையங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து சுகாதாரப் பிரிவினரால் விடுவிக்கப்பட்டதுடன், வீடுகளுக்கு கொண்டு சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் அனுமதி மீள வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையங்களை திறக்காது அனுமதி நிபந்தனைகளுக்கு அமைவாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வீடுகளுக்கு கொண்டு சென்று பொருட்களை வழங்க வேண்டும் எனவும்,

இதனை பொது அமைப்புக்கள் கண்காணிக்கும் எனவும் தீர்மானம் எட்டப்பட்டே குறித்த வர்த்தக நிலையங்கள் மீள செயற்பட சுகாதாரப் பிரிவினரால் பாஸ் அனுமதி மீள வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.