மறுபடியும் திரையில் ஜோதிகா!

470

jothika

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன். குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதிலேயே என் முழு நேரத்தையும் செலவிடுவேன், திருமணமாகப் போகும் எல்லா நடிகைகளும் இயக்குநர் உதவி இல்லாமல் சொந்தமாகச் சொல்லும் டயலாக் இது.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அப்படித்தான் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள், 2 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் கோடம்பாக்கத்துக்கு படையெடுப்பார்கள். ஸ்ரீதேவி முதல் சினேகா வரை யாரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.

ஆனால், ரீஎண்ரியில் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ அக்கா, அண்ணி வேடங்கள் தான். சிலருக்கு அம்மா வேடத்துக்கான வாய்ப்புகள் கூட கதவைத் தட்டும். அதைப் பார்த்து பயந்த நடிகைகள், பின்னங்கால் பிடரியில்பட வீட்டுக்கே ஓடிவிடுவார்கள்.

இதுவரைக்கும் இருக்கிற நல்ல பெயரை வைத்து காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைப்பார்கள். நாம் கேட்டால் மட்டும், நல்ல கேரக்டருக்காக வெயிட் பண்றேன் என்பார்கள். தமிழ்நாடே தூக்கிவைத்துக் கொண்டாடிய சிம்ரனுக்கு நடந்த கதை ஊர்உலகம் அறிந்த ரகசியம்.

இதனால்தான் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தார் ஜோ. சூர்யாவுக்காக ஒரே ஒரு விளம்பரப் படத்தில் மட்டும் அவருடன் ஜோடியாக நடித்தார்.

தற்போது திருமணமான பிறகும் சினேகாவுக்கு வாய்ப்புகள் குவிவதைப் பார்த்து, ஜோதிகாவுக்கும் நடிப்பு ஆசை துளிர்விட்டிருக்கிறதாம். இன்றைக்கு டி.வி., பத்திரிகைகள் எதைப் பார்த்தாலும் எல்லா விளம்பரங்களிலும் பிரசன்னா – சினேகா ஜோடியாக இருப்பதைப் பார்த்து, நாமும் இப்படி நடித்திருக்கலாமே என்று சூர்யாவிடம் கேட்டதாகச் சொல்கிறார்கள்.

அதுக்கென்ன? இனிமேல் நடித்தால் போச்சு என சூர்யாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். தவிர, சினிமாவிலும் நடிக்கும் ஆசை இருப்பதை ஜோ தயக்கத்துடன் வெளிப்படுத்த, யோசித்த சூர்யா, நல்ல கேரக்டர்கள் என்றால் பார்க்கலாம் என சொல்லியிருக்கிறாராம்.

ஹரிதாஸ்-சினேகா, இங்கிலீஷ் விங்கிலீஷ்-ரீதேவி போல நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம் கிடைத்தால் சூர்யா – ஜோ இருவருக்கும் சம்மதமாம். குழந்தைகள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால் விரைவில் ஜோதிகாவை திரையில் பார்க்கலாம் என்கிறார்கள்.