முல்லைத்தீவில் வாள் வெட்டு, வாகனத்திற்கு தீ வைத்த சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது!!

1049

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவில் வாள் வெட்டு மற்றும் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களை யாழ். பொலிஸார் நவாலியில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு வீடு புகுந்த சுமார் 7 பேர்கொண்ட கும்பல் வாள் வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்திச் சேதப்படுத்தியுள்ளதுடன், வாகனமொன்றுக்கு தீ வைக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்து.

இந்த நிலையில் சி.சி.ரிவி கமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வைத்து சந்தேகநபர்களை இனம் காணும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்ய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதான சந்தேகநபர்களாகச் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்களை நேற்று நாவலியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் சந்தேகநபர்களை முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்கவுள்ளனர்.