யாழில் ஒரே நாளில் இரண்டு கைகளிலும் தடுப்பூசி போட்டார்கள் : வயோதிபப் பெண் குற்றச்சாட்டு!!

1156

யாழில்..

யாழ். பரியோவான் கல்லூரியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்தில் தனக்கு இரண்டு கைகளிலும் ஒரே நாளில் தடுப்பூசி போட்டதாக தடுப்பூசியை பெற்ற வயோதிப பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த நிலையத்தில் தடுப்பூசியைப் பெறுவதற்காகச் சென்றிருந்தேன்.

எனக்கு ஒரு கையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் எனக்கு தடுப்பூசியை வழங்கிய பெண் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார்.

அவரிடம் நான் இரண்டு தடவைகளுக்கு மேல் எழுந்து செல்லலாமா எனக் கேட்டேன். அவர் பதிலளிக்காமல் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபடி சென்றார்.

நான் அவ்விடத்திலேயே இருக்க மறு பக்கத்தில் இன்னொரு உத்தியோகத்தர் அம்மா கையை காட்டுங்கள் என்று கூறியபடி இன்னுமோர் தடுப்பூசியை மறுகையில் போட்டார்.

ஊசி போட்ட சிறு நேரத்தில் எனக்கு தலை சுற்றுவது போல் உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்த வைத்தியர்களிடம் சொன்னேன் நீங்கள் சற்று அமர்ந்திருந்து விட்டுச் செல்லுங்கள் என பதில் கூறினார்கள்.

எனது மகளுடன் வீடு செல்லும்போது எனக்கு இரண்டு கைகளிலும் ஊசி போடப்பட்டது எனக் கூறினேன். எனது மகள் அவ்வாறு ஊசி போடக் கூடாது எனக்கூற நடந்த சம்பவத்தை எனது மகனிடம் தெரிவித்தேன்.

தடுப்பூசி ஒன்றா இரண்டா ஏற்றுவது என்ற விடயம் எனக்குத் தெரியாது. மகனை அழைத்துக் கொண்டு தடுப்பூசி வழங்கப்பட்ட விதம் தொடர்பில் அறிவதற்காகச் சென்றேன்.

முதலில் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பின் வைத்தியரைச் சந்திக்க அனுமதித்தார்கள் நடந்த சம்பவத்தை வைத்தியரிடம் எனது மகன் விவரமாகச் சொன்னார்.

எங்கள் முன்னிலையில் அங்கு கடமையிலிருந்த வைத்தியர் கையடக்க தொலைபேசிகளை கடமையின் போது பாவிக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார்.

எனக்கு ஏதேனும் வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை கூறியதுடன் மறுநாள் எனது வீடு தேடி வைத்தியர் ஒருவர் வந்து எனது உடல் நலம் குறித்துப் பார்வையிட்டு சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.