கடுமையான விமர்சனங்களின் பின்னர் டுவிட்டர், சமூக இணையதளங்களுக்கான தடை நீக்கம்!!

525

twitter-facebook-logoதுருக்கியில் டுவிட்டர் குறுந்தகவல் சமூக இணையதளத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுமாறு அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் துருக்கியில் புதன்கிழமை முதல் டுவிட்டர் இணையதளத்தை பயன்படுத்தக்கூடிய நிலை மீள உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படலாம் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர். துருக்கியின் பிரதமர் ரசெப் தய்யீப் எர்துவான் இந்த டுவிட்டர் தடையை கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் டுவிட்டர் தளத்தில் வெளியாகியிருந்த நிலையிலேயே பிரதமர், டுவிட்டர் பாவனையை நாட்டில் தடை செய்தார்.

டுவிட்டர் மீதான இந்தத் தடை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. நாட்டின் அதிபர் அப்துல்லா குல், ஒரு சமூக வலைத்தளத்தை முழுமையாக மூடி விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.