நித்திரையிலிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!!

907


மட்டக்களப்பு..



மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் கொள்ளையர் ஒருவர் கத்தியை வைத்து அவரின் கழுத்திலிருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியைப் பறித்து எடுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உரிமையாளர் தனது வீட்டை இடித்துப் புனரமைத்து வருகின்ற நிலையில் அதே காணியில் தற்காலிகமாக வீடு ஒன்றை அமைத்து வசித்து வருகின்ற நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் வயதான மாமியார் உட்பட 3 பேர் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.




இந்த நிலையில் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டின் தகரக் கதவைத் திறந்து வீட்டிற்குள் கொள்ளையர் ஒருவர் புகுந்துள்ளார். உறக்கத்திலிருந்த 45 வயதுடைய பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியைக் கழற்றி தருமாறும் அல்லது கத்தியால் வெட்டி கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.


இதனையடுத்து கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி கொடுத்த நிலையில் அதனைப் பறித்தெடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வீட்டிற்கு பொலிஸ் தடயவியல் பகுப்பாய்வு பிரிவினர் சென்று கொள்ளை தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.