கடல் வழியாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி முல்லைத்தீவு பெண்ணை ஏமாற்றியவர்கள் கைது!!

917

தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டு படகில் இலங்கை யுவதியை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றிய நால்வர் கைது செய்யப்பட்டு இன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனுஷ்கோடியில் இருந்து நேற்று அதிகாலை நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதன்போது அவர்கள், முதலாவது மணல் திட்டில் ஒரு பெண் தனியாக நிற்பதை பார்த்து மெரைன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில் ரோந்து படகில் சென்ற மெரைன் பொலிஸார், குறித்த பெண்ணை மீட்டு ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்ததில் அந்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியை சேர்ந்த கஸ்தூரி என தெரியவந்திருந்தது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் உள்ள அந்த பெண்ணின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் மீண்டும் இலங்கை வர முடிவெடுத்துள்ளார்.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக படகில் செல்ல முடிவு செய்து கடந்த 4ஆம் திகதி சென்னையில் இருந்து பேருந்து மூலம் புறப்பட்டு ராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ளார்.

பின் ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அந்த பெண் தனுஷ்கோடியை சேர்ந்த நபரொரவரிடம் இலங்கைக்கு செல்ல படகு கட்டணமாக 30,000 ரூபா கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் பாம்பன் சின்ன பாலம் கடற்கரை வர சொல்லியதால் அங்கு சென்ற அந்த பெண் கடலில் தயாராக இருந்த ஒரு படகில் புறப்பட்டு இலங்கை சென்றுள்ளார்.

கஸ்தூரியை ஏற்றிச்சென்ற படகோட்டிகள் நீண்ட நேரம் கடலில் சுற்றி விட்டு நள்ளிரவு 12 மணியளவில் இலங்கை வந்து விட்டதாக தெரிவித்து தனுஷ்கோடி கடல் பகுதியில் அமைந்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் கஸ்தூரியை கைது செய்த மெரைன் பொலிஸார் இலங்கைக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மீனவர் முனீஸ்வரன்,

படகில் ஏற்றி சென்ற முனிராஜ், சிபிராஜ் மற்றும் சின்ன பாலத்தை சேர்ந்த மீனவ பெண் மற்றும் இலங்கை பெண் உட்பட ஐந்து பேரையும் இன்று காலை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேலும், வழக்கு விசாரணைக்கு பின்னர் இலங்கை பெண் உட்பட 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.