விண்வெளியிலிருந்து 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்!!

1231

விண்வெளியிலிருந்து..

விண்வெளியில் ஆய்வு மையம் ஒன்றை கட்டமைக்கும் பணிகளுக்காக சென்றிருந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளனர்.

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

தியான்ஹே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஆய்வு மையத்துக்கான மைய பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் திகதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ‘தியான்ஹே’ விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங்,லியு போமிங், மற்றும் டாங் ஹோங்போ ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு அவர்கள் விண்வெளி ஆய்வு மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் முழு ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 2 முறை விண்வெளி நடை பயணத்தையும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி 90 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் பூமிக்கு புறப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.30 மணிக்கு சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில், இவர்கள் பயணித்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.