வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள் : தென்னிலங்கையில் ஏற்பட்ட பரபரப்பு!!

1460

மர்மப் பொருள்..

தென்னிலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருள் ஒன்று மாயமானமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பத்தேகம, குரேகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் வாசலில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென வானில் இருந்து கல் போன்ற ஒன்று பூமியில் விழுந்துள்ளது. விழுந்தவுடன் அவை நொருங்கியுள்ளதுடன், வெள்ளை நிறத்திலான தூள் போன்று காட்சியளித்துள்ளது.

இந்த சம்பவத்தை அவதானித்த குடும்பத்தினர் உடனடியாக பொலிஸாராருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அதனை பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இரவு 7 மணியளவில் வானில் இருந்து கல் ஒன்று விழுவதனை சிறுவர்கள் இருவர் அவதானித்துள்ளதுடன் அதில் ஒரு பகுதியை எடுத்து சென்று குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கியுள்ளனர்.

அதனை கையில் பிடிக்கும் போது சூடாக இருந்ததாகவும் அதன் பின்னர் அதனை ஒரு பையில் போட்டு வைத்ததாகவும், பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பையில் இருந்த கல் போன்ற குறித்த பொருள் சிறிது நேரத்தில் தூள் போன்று மாறியுள்ளது.

இதனை மழையின் போது வானில் இருந்த விழுந்த விண்கற்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில் அதனை ஆராய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.