வவுனியாவில் கடும் மழை காரணமாக உடைபெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம்!!

2069

நொச்சிக்குளம்..

வவுனியாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி வருகின்றது.

அந்த வகையில், வவுனியாவில் நேற்றும் (31.10) மதியத்திற்கு பின் கடும் மழை பெய்தது. மழை காரணமாக வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தின் நீர் வரத்து அதிகரித்த நிலையில் குளத்தின் கட்டு கீழ் இறங்கி உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது.

இதனையடுத்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் இராணுவத்தினர், நகரசபையின் தீயணைப்பு பிரிவு, கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் இணைந்து குளக்கட்டில் மண் பைகளை இட்டு குளம் உடைப்பெடுக்காமல் தடுக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த குளம் உடைப்பெடுத்தால் அதன் கீழ் உள்ள 98 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் அழிவடைவதுடன், பல குடிமனைகளும் நீரில் முழ்கும் அபாய நிலை ஏற்படும். உடைபெடுப்பதை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.