வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கருத்து முரண்பாடு!!

1032

ஐக்கிய மக்கள் சக்தி..

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார தலைமையில் நடைபெற்ற போது கட்சி உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருத்தினர் விடுதி ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தலைமையில் குறித்த கூட்டம் இன்று (02.11) நடைபெற்றது.

இதன்போது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டது. இதன்போது அக் கட்சியின் வவுனியா மாவட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்திகாக செயற்படுகின்ற போதும் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும், திட்டமிட்டு தம்மை தற்போது கட்சியின் மாவட்ட பதவிகளில் உள்ளோர் ஓரம்கட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

கட்சியினால் தமக்கு எந்த விடயங்களும் அறிவிக்கப்படுவதில்லை எனவும், கட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் எந்தவித செயற்பாடுகளும் முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

பிறிதொரு ஆதரவாளர், கட்சியின் பெயரால் மக்களிடம் பணம் பெற்றவர்களே கட்சியில் இருந்து ஓதுக்கி இருப்பதாகவும், திட்டமிட்டு எவரையும் கட்சி ஓரங்கட்டவில்லை எனவும் தெரிவித்ததுடன், கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது பிறிதொரு உறுப்பினர், ஊடகங்கள் முன் எமது கட்சி பிரச்சனையை கதைத்து அதனை பெரிதாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

வேறு பல உறுப்பினர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்ததையடுத்து கருத்தறியும் செயற்பாடு நிறுத்தப்பட்டு கட்சியின் செயலாளரும், பாராமளுன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார உரையாற்றியிருந்தார். இதன் பின் கட்சி உறுப்பினர் சிலரை தனித்தனியாக சந்தித்து பேசியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்கிரமரட்ண, புத்திக பத்திரண மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் உமா சந்திர பிரகாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.