வவுனியா மற்றும் கிளிநொச்சியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் கைது!!

2712

திருட்டு..

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் இன்று (19.11) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் கடந்த செப்ரெம்பர், ஒக்ரோபர் மாதங்களிலும், இம்மாதமும் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைவாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் குறித்த சம்பவங்கள் தொடர்பில் வாள்களுடன் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 18 பவுண் நகை திருடப்பட்டமை,

அதனைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் ஆச்சிபுரம் பகுதியில் 10 பவுண் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் திருடப்பட்டமை, சிதம்பரபுரம் பகுதியில் பல்சர் ரக மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை, தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை,

இம் மாதம் உக்குளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு சென்ற பெண் ஒருவரிடம் 3 பவுண் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டமை மற்றும் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் சங்கிலி அறுக்கப்பட்டமை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் குறித்த நால்வருக்கும் தொடர்பு இருந்தமை விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 4 வாள்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் பொல்லுகள், 15 பவுண் நகை, முகத்தை மறைக்கும் கறுப்பு துணி என்பன மீட்கப்பட்டுள்ளன. அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.