வவுனியா ஓமந்தையில் 12 வயது பாடசாலை மாணவி கர்ப்பம் : 32 வயது குடும்பஸ்தர் சந்தேகத்தில் கைது!!

5339

ஓமந்தையில்..

வவுனியா, ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுக்கு ஆன பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி கர்ப்பம் தரித்துள்ள நிலையில், 32 வயது குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் இன்று (27.11) கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மாணவிக்கு நேற்றையதினம் (26.11) வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியர்கள் மாணவியினை சிகிச்சைக்குட்படுத்திய போது மாணவி கர்ப்பம் அடைந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். மாணவியிடம் ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் தன்னை ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில், ஓமந்தை மாதர் பனிக்கர்மகிழங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தில் ஓமந்தைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். இதேவேளை, குறித்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.