வவுனியா நகரில் பிரபல நகை கடை ஒன்றில் நகை கொள்வனவு செய்வது போல் திருடிய பெண் கைது!!

5383

திருட்டு..

வவுனியா, பசார் வீதியில் உள்ள பிரபல நகை கடை ஒன்றில் நகை திருடிய பெண் ஒருவர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று (28.11) கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பசார் வீதியில் உள்ள பிரபல நகை ஒன்றில் வியாபார நேரத்தில் 4 பவுண் சங்கிலி ஒன்று திருடப்பட்டுள்ளமை தொடர்பில் அதன் உரிமையாளரால் கடந்த 11 ஆம் திகதி வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த நகை கடைக்கு சென்று அங்குள்ள சிசீடிவி வீடியோவை பார்வையிட்டதுடன், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நகைக் கடையில் நகை கொள்வனவு செய்வதற்கு சென்ற பெண் போல் சென்ற ஒருவர் நகைகளை பார்வையிட்ட போது 4 பவுண் நகை ஒன்றை எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடுகண்ணாவை பகுதியில் வசிக்கும் 31 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 4 பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.