சாக்கு மூட்டையில் கிடந்த தாயின் உடல்… அலறிய மகன்கள் : தப்பியோடிய தந்தை!!

1036

சென்னை..

சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கௌதம், ஹரிஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

ரமேஷ் அடிக்கடி குடித்து விட்டு வாணியுடன் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். மேலும் வாணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடிக்கடி அடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு நேற்று முன்தினம் இரவு ரமேஷ் தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ரமேஷின் மூத்த மகன் கௌதம் அம்மா எங்கே என்று கேட்ட போது அம்மா வேறு ஒருவருடன் ஓடிப் போய் விட்டார்கள் என்று கூறி சென்றுள்ளார். அன்று இரவு வீட்டில் கௌதம் மற்றும் அவரது நண்பர் மட்டுமே இருந்துள்ளனர்.

நேற்று முழுவதும் வாணியின் மகன்கள் தனது தாயை தேடி உள்ளனர். மேலும் தந்தையையும் காணவில்லை என உறவினர்கள் இடத்தில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கௌதம் , ஹரிஷ் மற்றும் கௌதமின் நண்பர் ஒருவர் என மூன்று பேர் மட்டுமே வீட்டில் படுத்து உறங்கி உள்ளனர். வாணியின் இளைய மகன் எழுந்து பார்த்த போது டிவியின் அடியிலுள்ள டேபிள் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை கண்டுள்ளார்.

மேலும் லேசான துர்நாற்றமும் வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து வீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலே வந்து பார்த்த போது துர்நாற்றம் வீசியதால் உடனடியாக இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் அங்கு வந்த ஓட்டேரி போலீசார் டிவி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் டேபிள் அடியில் துணி மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் முகத்தில் பலத்த காயங்களுடன் வாணி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வாணியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாணியின் கணவர் ரமேஷை தேடி வருகின்றனர்.