4 ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய கொடுமை!!

969

கடலூர்..

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் வினோத்குமார். எலக்ட்ரிசியனான இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின் போது 20 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு சீர்வரிசைப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை சீதனமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும், ஆடி மாத சீராக 4 சவரன் தங்கசங்கிலி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வினோத்குமாரின் சகோதரி விந்தியா என்பவர் பண்ருட்டியில் வீடு கட்டுவதற்காக சூர்யாவின் 5 சவரன் நகையை அடமானம் வைத்தார்களாம். இதற்கு, சூர்யா எதிர்ப்புத் தெரிவித்ததால் அன்று முதல் மாமனார் பழனி, மாமியார் ராஜேஸ்வரி,

நாத்தனார் விந்தியா ஆகியோர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு, அவருக்கு குழந்தை இல்லாததையும் குறையாக கூறி கொடுமை செய்துள்ளனர்.

குழந்தை இல்லாதததற்காக புள்ளப்பூச்சியினை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து சூர்யாவை அப்படியே சாப்பிட வைத்துள்ளனர். இதனால், கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற சூர்யா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீஸார் இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சூர்யாவை மீண்டும் வினோத்குமாருடன் அனுப்பி வைத்தனராம். அப்போது கூடுதலாக 5 சவரன் நகை கேட்டதற்கு 4 சவரன் வழங்கி உள்ளனர்.

ஒரு சவரன் குறைவதாக கூறியும், அவருக்கு குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டியும் கணவன், மாமியார்- மாமனார் உள்ளிட்ட 4 பேரும் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது.

இதனால், மனமுடைந்த சூர்யா கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, பண்ருட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார். அதில், சூர்யாவை தற்கொலைக்குத் தூண்டியதாக வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மாமனார் பழனி, மாமியார் ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டுகளும், நாத்தனார் விந்தியாவிற்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், அனைவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வபிரியா தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை தங்கள் வீட்டு மகளாகப் பார்க்காமல் கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டினால், என்னமாதியான தண்டனை கிடைக்கும் என்பதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணி.