வரிசையில் காத்திருந்து உயிரிழந்த கணவனின் இழப்பை ஏற்க மறுக்கும் மனைவி : இலங்கையில் தொடரும் அவலம்!!

1959

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

மாபொல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 70 வயதுடைய நபரே கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போது இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இதன்போது உயிரிழந்தவரின் மனைவியை பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த நிலையில், அவர் தனது கணவர் உயிரிழந்துள்ளமையை நம்பாது சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்த தன் கணவர்,

தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும்,”அவருக்கு சர்க்கரை நோய், நெஞ்சுவலி. மருந்து சாப்பிடுகிறார்.ஒன்றுமில்லை என்றும் அங்கிருந்த அனைவரிடமும் கூறியுள்ளார்.

பின்னர் பொலிஸாரின் உதவியுடன் உயிரிழந்த கணவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

உயிரிழந்த கணவனை முச்சக்கர வண்டியில் ஏற்றி அவ்வப்போது உடலை அசைத்து சுயநினைவு பெற முயலும் காட்சி கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் காண்போரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினமும் (19) கண்டி, யட்டிநுவர வீதியில் மண்ணெண்ணெய் வரிசையில் நின்றிருந்த 71 வயதுடைய நபரொருவர் தவறி விழுந்து உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.