9 வயதுச் சிறுமி விவகாரம் : விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்!!

2260

அட்டுலுகம பிரதேசத்தில்..

நாட்டையே உலுக்கிய அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள 9 வயது ஆயிஷாவின் கொலை சம்பவம் தொடர்பில், சிறுமியுடைய வீட்டிற்கு அடிக்கடி வருகை தந்த அயலவர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

28 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், குறித்த நபர் சிறுமியின் தந்தையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருகைத் தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமி காணாமல் போனதையடுத்து அந்த பிரதேசம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, ​​28 வயதுடைய அந்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி கொல்லப்படுவதற்கு முன்னர் சிறுமி துஷ்பிரயோகத்திறகு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என என சந்தேகிக்கும் பொலிஸார், இன்று (30) நடத்தப்படும் பிரேத பரிசோதனையின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.

சிறுமி காணாமல் போன தினத்தில் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு கடைக்கு சென்ற போது குறித்த 28 வயதுடைய நபர் நடைபாதையில் இருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் அவர் சிறுமியை சதுப்பு நிலத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும், சிறுமி கத்தத் தொடங்கியதால் சேற்றில் முகத்தை வைத்திருக்கும் போது அவர் இறந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமியை வீதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமி ஒருவர் பார்த்துவிட்டு வீதியில் தனியாக இருப்பது குறித்து விசாரித்து விட்டு சென்றதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தாத்தா வரும் வரை காத்திருக்கின்றேன் என சிறுமி ஆயிஷா தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று அட்டலுகமவுக்குச் சென்று குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பண்டாரகம பொலிஸார் கிராம மக்களின் உதவியுடன் இந்த குற்றத்தின் மறைக்கப்பட்ட விபரங்களை வெளிக்கொணர முடிந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.