சரியான தூக்கமின்றித் தவிக்கிறோம் : கனடாவில் கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் உருக்கம்!!

792

கனடாவில்..

தனது மகன் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்காத நிலையில் தாம் தினமும் செத்துக் கொண்டிருப்பதாக, இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர் கார்த்திக்கின் தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி, Seneca கல்லூரியில் பயின்றுவந்த கார்த்திக் வாசுதேவ் (வயது 21) பகுதி நேர பணிக்காக சென்று கொண்டிருந்த போது ரொரன்றோவிலுள்ள Sherbourne சுரங்க புகையிரத நிலையத்துக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் தனது மகனின் இழப்பு தொடர்பில் கார்த்திக்கின் தாயார் பூஜா வாசுதேவ் கூறுகையில், எங்களை தினமும் வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் வேண்டும்.

பிள்ளையை இழந்து இரண்டு மாதங்களாக நாங்கள் சரியான தூக்கமின்றித் தவிக்கின்றோம். அந்த நபர் கார்த்திக்கை மட்டும் கொல்லவில்லை, எங்கள் மொத்தக் குடும்பத்தையும் கொன்றுவிட்டார்.

எங்கள் பிள்ளை ஏன் கொல்லப்பட்டான் என்று தெரியாமல் தினமும் நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கார்த்திக்கின் தம்பி கூறுகையில், எனக்கு ஒரே ஒரு நண்பன்தான் இருந்தான், அது என் அண்ணன் தான். தற்போது அண்ணன் இல்லாமல் வாழ்வே வெறுமையாகிப் போயுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கார்த்திக்கின் தந்தை ஜித்தேஷ் வாசுதேவ் கூறுகையில், நானும் என் மனைவியும் எங்கள் மொத்த சேமிப்பையும் மகனுடைய கல்விக்காக செலவிட்டுவிட்டோம். எங்கள் வீட்டையும் அடமானம் வைத்து 50,000 டொலர்கள் கடன் வாங்கித்தான் எங்கள் மகன் கார்த்திக்கை கனடாவுக்கு நாங்கள் அனுப்பியிருந்தோம். அந்த பணம் கார்த்திக்கினுடைய முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்துக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.