எரிபொருள் நிலையத்தில்..
வவுனியா 4ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஜ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் நேற்று முன்தினம் (25.06.2022) இரவு 11.30 மணியளவில் கான்களில் எரிபொருள் நிரப்பிய பொலிஸாரை இளைஞர்கள் சுற்றிவழைத்து முற்றுகையிட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த எரிபொருள் நிலையத்தில் பொதுமக்களுக்கு பெற்றோல் முடிவடைந்துள்ளது என தெரிவித்த நிலையில் இரவு 11.30 மணியளவில் எரிபொருள் நிலையத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் அவர்களின் உத்தியோகபூர்வ வாகனத்தில் கான்களை ஏற்றிச்சென்று பெற்றோல் நிரப்பியுள்ளனர்.
அதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் அவர்களின் வாகனத்தினையும் பொலிஸாரையும் முற்றுகையிட்டனர். அதன் பின்னர் அவ்விடத்திலிருந்து சில பொலிஸார் சென்றதுடன் பொலிஸாரின் வாகனத்தினை எடுத்துச்செல்ல இளைஞர்கள் அனுமதி மறுத்த நிலையில் வாகனத்தினை சாரதி (பொலிஸார்) மாத்திரம் எரிபொருள் நிலையத்தில் காலைவரை நின்றார்.
எரிபொருள் நிலையத்திற்கு நேற்று (26.06.2022) காலை வருகைதந்த பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தவறுக்கு மன்னிப்பு கோரியமையடுத்து பொலிஸாரின் வாகனத்தினை எடுத்துச்செல்வதற்கு இளைஞர்கள் சம்மதம் தெரிவித்தனர்.