முதலையை திருமணம் செய்த மேயர் : ஊர் கூடி கொண்டாடிய திருவிழா.. சுவாரஸ்ய பின்னணி!!

685

முதலையை மணந்த மேயர்…

மெக்சிக்கோவில் குட்டி முதலையை மேயர் ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது காலங்காலமாக அங்கே பின்பற்றப்பட்டு வரும் மரபாகும்.திருமணம் குறித்த பார்வை உலகம் முழுவதும் மாறிவிட்டது. ஒருபால் திருமணங்களை ஆதரிக்கவும் பல நாடுகள் சட்டங்களை இயற்றிவருகின்றன.

ஆனால், சில இடங்களில் வினோதமாக உயிரினங்களை திருமணம் செய்துகொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் மெக்சிகோவை சேர்ந்த மேயர் ஒருவர் சிறிய முதலையை திருமணம் செய்திருக்கிறார். ஆனால், இதனை அந்நாட்டு மக்கள் கலாச்சாரமாக கருதுகிறார்கள்.

மெக்சிகோவில் உள்ளது ஓக்ஸாகா என்னும் கிராமம். இங்கு மீன் பிடித்தலே முக்கிய தொழிலாக இருக்கிறது. இந்த கிராமத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் கடந்த வியாழக்கிழமை அன்று முதலை ஒன்றை திருமணம் செய்திருக்கிறார். அந்த முதலைக்கு 7 வயது ஆவதாகவும் இந்த திருமணத்தை காண பலர் வந்திருந்ததாகவும் கூறுகிறார் இந்த திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்.

உண்மையில் இது மக்கள் நலமாக வாழ செய்யப்படும் சடங்கு தான் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். முதலையை திருமணம் செய்துகொண்டால் வேளாண்மை செழிக்கும் எனவும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் எனவும் பல ஆண்டுகளாக நம்புகிறார்கள் இந்த ஊர் மக்கள்.

ஓக்ஸாகா மாநிலத்தின் சோண்டல் மற்றும் ஹுவேவ் ஆகிய பழங்குடி இனங்களில் ஹிஸ்பானிக் காலத்திற்கு முன்பே, இந்த கலாச்சாரம் இருந்திருக்கிறது.இதுகுறித்து பேசிய திருமண மாப்பிள்ளையான விக்டர் ஹ்யூகோ சோசா,”இது இயற்கையிடம் எங்களுடைய கோரிக்கையை முன்வைப்பது போன்றது. போதுமான மழை, போதுமான உணவு, நாங்கள் ஆற்றில் மீன் வேண்டும் என்று இதன்மூலம் இயற்கையிடம் கேட்கிறோம்” என்றார்.

சடங்கில் முதலைக்கு வெள்ளை நிற திருமண ஆடை மற்றும் பிற வண்ணமயமான ஆடைகளை அணிவித்து மகிழ்கிறார்கள் மக்கள். முதலையை இளவரசி என்று அழைக்கும் இந்த மக்கள், அவை பூமியை காப்பதாகவும் நம்புகிறார்கள். முதலையை திருமணம் செய்துகொள்வதன் மூலமாக மனிதர்கள் இறைத்தன்மையுடன் கலப்பதாக கருதுகிறார்கள் இந்த மக்கள்.

இந்த திருமண விழாவின் போது, அலங்கரிக்கப்பட்ட முதலையை உள்ளூர் மக்கள் கழுத்தில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டுவருகிறார்கள். இந்த விழாவை காண வரும் வெளியூர் மக்கள், முதலையை பார்த்து பயந்து ஓடுவதும், பின்னர் அந்த நிகழ்ச்சியை அதிசயத்துடன் பார்ப்பதும் வாடிக்கை என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.