‘திருமணத்திற்கு வந்தவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்துடனும்”.. அதிர வைத்த மணப்பெண்!!

1502

திருமணத்தில்..

தனது திருமணத்தில் விருந்தினர்களிடம் சாப்பாட்டுக்கு பணம் வசூல் செய்ய இருப்பதாக ஒரு பெண் தெரிவித்திருக்கிறார். அவருடைய பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காலம் காலமாக திருமணம் என்றாலே வித்தியாசமான பதார்த்தங்களுடன் கூடிய விருந்துகள் நடைபெறுவது நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் திருமணத்தன்று ஆடிப்பாடி, விதவிதமான உணவுகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிமாறுவது வழக்கமாகிவிட்டது.

ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய தருணமாக கருதப்படும் திருமணத்தில் என்னென்ன வகையான உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என்ற பட்டியல் கல்யாணத்திற்கு பல மாதங்கள் முன்பே திட்டமிடப்பட்டுவிடும்.

ஆனால் இதற்கு ஆகும் செலவுகள் மிக அதிகமானவை. இதனாலேயே எளிமையான முறையில் திருமணத்தை நடத்த தற்போது பெரும்பாலானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், புதுமணப்பெண் ஒருவர் வித்தியாசமான யோசனையை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட அது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அந்த இளம்பெண், திருமணத்துக்கான செலவுகளை கட்டுப்படுத்த இருப்பதாகவும் அதனால் திருமணத்தில் கலந்துகொள்ளும் உறவினர்களிடம் உணவுக்கான தொகையை வாங்கலாமா என யோசிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவருடைய பதிவில்,”விருந்தினர்கள் தங்கள் உணவுக்கு பணம் செலுத்துமாறு யாராவது இதற்கு முன்னர் கேட்டிருக்கிறார்களா? தற்போது எல்லாம் மிகவும் விலை உயர்ந்துவிட்டது. அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் எங்களது திருமணத்தை ஒத்திவைக்கவோ, விருந்தினர் பகுதியை ரத்து செய்யவோ வேண்டும்.

அல்லது பரிசுகளுக்குப் பதிலாக உணவுக்கு பணம் செலுத்துமாறு உறவினர்களிடம் சொல்ல இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர்,”இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன்.

யாராவது எனக்கு ஆலோசனை கூறுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதனிடையே நெட்டிசன்கள் பல ஆலோசனைகளை அந்த பெண்ணுக்கு வழங்கி வருகின்றனர். ஒருவர் அந்த பதிவில்,”தனிப்பட்ட முறையில் என்னிடம் யாராவது பரிசுகளுக்கு பதிலாக விருந்து உணவுக்கு பணம் கொடுக்க சொன்னால் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன்.

ஏனென்றால், மக்கள் சொந்த பந்தங்களுடன் நேரத்தை செலவிடவே திருமணங்களுக்கு வருகின்றனர். அப்போது பணம் பெரிய விஷயமாக கருதப்பட மாட்டாது” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர்,”பரிசுகள் எதிர்பார்க்காத நிலையில், நீங்கள் விருந்துக்கு பணம் வசூலிப்பதில் தவறு இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பல ஆலோசனைகளை நெட்டிசன்கள் அந்த பெண்ணுக்கு வழங்கி வருகின்றனர்.