வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பரிகாரம் வழங்கப்படும் : திலீபன் எம்.பி!!

1213

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பரிகாரம் வழங்கப்படும் என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (13.08) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது இந்த அரசாங்கம் சர்வகட்சி அரசாங்கம். ஒரு சிலரைத் தவிர சர்வகட்சி அரசாங்கமாகத் தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலரும் எமது ஆளுக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் தான்.

ஜனாதிபதி அவர்கள் அனைத்து கட்சிகளையும தம்முடன் பேசி சர்வகட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் சிலர் தலையையும், வாலையும் காட்டும் நிலை காணப்படுகின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 ஆம் நாளை கடந்துள்ளது. இதில் பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

இந்தப் போராட்டம் முதன் முதலில் வவுனியா மாவட்டத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. வெறும் 12 பேருடன் வவுனியா தபால் நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்த 12 பேரில் நானும் ஒருவன். எனது நண்பர்கள், உறவுகளுடன் இணைந்து கட்சி பேதமின்றி எவ்வித அரசியலுமின்றி இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல சில அரசியல்வாதிகளின் பின்புலத்தால் போராட்டத்தில் உள்ள சிலர் வேறு பாதையை நோக்கி செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாகவும், காணாமல் ஆக்டகப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் எமது அமைச்சர் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

நானும் ஒரு தமிழ் மகனாக அவர்களுக்கான பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பரிகாரம் வழங்கப்படும்.

விரைவில் அதனை எழுத்து வடிவில் கொடுக்கவுள்ளோம். கலந்துரையாடி அந்த தீர்வு எட்டப்பட்ட பின் அதனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.