நான் அவனில்லை திரைப்பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் : நடந்த விபரீதம்!!

535


நாமக்கல்லில்..



கோவை, திருவாரூர். நாமக்கல் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை என்ற அமைப்பை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.



நடிகர் ஜீவன் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் நான் அவன் இல்லை, அந்த படத்தில் பெண்களிடம் உருகி, உருகி பேசியும், பந்தாவாக கதை விட்டும் ஏமாற்றி பல பெண்களை திருமணம் செய்வான், இது போன்ற சம்பவம் படத்தில் மட்டுமே நடைபெறும் என நினைத்திருந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் மீது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.




திருவாரூரை சேர்ந்த வனிதா மற்றும் நாமக்கல் பகுதியை சேர்ந்த பிரியா ( பெயர்மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரண்டு பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளனர்.


அந்த புகாரில் கரூர் மாவட்டம் பரமத்தி அடுத்த நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த கருணாநிதி -நிர்மலா தம்பதியரின் மகனான பார்த்திபன் தான் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும் அதே வேளையில் கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை என்ற அமைப்பில் நிர்வாகியாக பணியாற்றி வருவதாகவும் கூறி பல இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ம் ஆண்டு 17 வயதே நிரம்பிய வனிதா என்ற தன்னை பொள்ளாச்சியில் வைத்து திரைப்படம் எடுப்பதற்காக நேர்காணல் செய்ததாகவும் அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து தனக்கு மயக்கம் தெளிந்ததும் தனது கால விழுந்து மன்னிப்பு கேட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் வரை கோவை புதூர் பகுதியில் பார்த்திபன் தன்னுடன் வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

திடீரென சில நாட்கள் வெளியூருக்கு செல்வதாக கூறி சென்ற பார்த்திபன் வீடு திரும்பாததால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது வேறு ஒரு பெண் அழைப்பை எடுத்து தான் பார்த்திபனின் மனைவி என்று கூறியதுடன் தன்னை அவதூறான வார்த்தைகளால் திட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பார்திபன் தொடர்பாக விசாரித்தபோது ஏற்கனவே பல பெண்களை இதேபோன்று அவர் ஏமாற்றியது தெரியவந்ததாகவும் பார்த்திபனின் மோசடிக்கு அவரது தாய் மற்றும் தந்தை உடந்தையாக இருந்து வந்ததாக கூறியுள்ளார்.

இதேபோல் நாமக்கல்லை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை கடந்த 2020 ம் ஆண்டு திருமணம் செய்ததாகவும் அப்போது சொந்த வீடு மற்றும் அரசு வேலையில் இருப்பதாக கூறி பார்த்திபன் தன்னை திருமணம் செய்ததாக கூறியுள்ளார். சில நாட்களிலேயே பார்த்திபன் தங்கி இருந்த வீடு வாடகை வீடு என்று தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் வெளியாட்களிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்ததும் அந்த நபர் வீட்டில் வந்து மிரட்டியதாக கூறியுள்ளார். இதனையடுத்து உங்கள் வீட்டில் இருந்து பணம் வாங்கி தர வேண்டும் என பார்த்திபன் கெஞ்சியதால் தனது தாய் மற்றும் உறவினர்களிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து சில நாட்களில் பார்த்திபனின் செல்போனில் பல பெண்களின் புகைப்படம் இருந்ததாகவும் இது தொடர்பாக கேட்டதற்கு தன்னை அடித்து கொடுமைபடுத்தியதாக கூறியுள்ளார். சமூக வலைதள பக்கத்த்தை பார்த்த போது பல பெண்களுடன் பார்த்திபன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் மீது காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் பார்த்திபனுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதன் காரணமாகவே தங்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

இனி எங்களை போன்று எந்த பெண்களும் பாதிக்கப்படக்கூடாது என்றும் எங்களை மட்டும் இல்லாமல் இன்னும் பல பெண்களை ஏமாற்றி உள்ளாதகவும் புகார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடிக்கு பார்த்திபனின் பெற்றோர்களும் உதவியாக இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் அழுதுகொண்டே தெரிவித்துள்ளனர் .