கேக் என நினைத்து எலி பேஸ்டை சாப்பிட்ட சிறுமி மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

345

காரைக்காலில்..

புதுச்சேரி காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியில் வசிப்பவர் ராஜா. அவரது மனைவி ஸ்டெல்லா மேரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் சலேத் நிதிக்சனா (வயது14).

அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சலேத் நிதிக்சாவிற்கு தசை சுருக்க நோய் ஏற்பட்டதால் சரியாக நடக்க முடியாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் சலேத் நிதிக்சனா வீட்டின் ஜன்னல் சுவற்றில் இருந்த எலி மருந்து பேஸ்டை ‘கேக்’ என நினைத்து எடுத்து சாப்பிட்டுள்ளார்.

இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் புதுச்சேரி மாநிலத்தில் எலி பேஸ்ட்டை தடை செய்வது தொடர்பாக சுகாதாரத்துறை முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆலோசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.