இரட்டைக் கொலையில் தப்பிய இளைஞன் : திட்டமிட்டு சிக்கவைத்த போலிஸ்!!

359

மயிலாடுதுறையில்..

இரட்டைக் கொலை வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த வட மாநில வாலிபரை தமிழக தனிப்பட போலீசார் பிடித்து விமான மூலம் சென்னை அழைத்து வந்திருக்கிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி. ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட தன்ராஜ் சவுத்ரி கடந்த 15 வருடங்களாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறார். பூம்புகார் தர்ம குளம் பகுதியில் நகை அடகு கடை , தங்க நகைகள் மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி அதிகாலையில் இவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் சவுத்திரியின் மனைவி ஆசா, அவரது மகன் அகில் இருவரையும் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்து விட்டு தன்ராஜ் அவரது மருமகள் இருவரையும் கட்டி போட்டு விட்டு வீட்டிலிருந்த 12.5 கிலோ தங்க நகைகள் , 6 லட்சத்து 75 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். தன்ராஜ் சவுத்ரி வீட்டில் இருந்த காரையும் திருடி சென்றனர்.

இந்த கொலை , கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் சீர்காழி அடுத்த இருகூர் சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிஸ், ரமேஷ் பட்டேல், மஹிபால் சிங் மூன்று பேரையும் மயிலாடுதுறை போலீசார் பிடிக்கச் சென்ற போது , அதிரடிப்படை வீரர் சாலீம் என்பவரை எதிர்த்து தாக்கினார்கள். அப்போது ராஜஸ்தான் மாநிலம் அகோரி கிராமத்தைச் சேர்ந்த மஹிபால் சிங்கை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

மறைந்திருந்த ராஜஸ்தான் தோப்பூரை சேர்ந்த மனிஷ், ராஜஸ்தான் மாநிலம் ரமேஷ் படேல் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிஸ், ரமேஷ் படேல் இருவருக்கும் தொடர்புடைய கும்பகோணம் கருணாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜாமீனில் வந்த மனிஸ், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜஸ்தானுக்கு சென்று தலை மறைவாகிவிட்டார். ராஜஸ்தானில் இருந்த அவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை அடுத்து சீர்காழி போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் வரைந்து சென்று அங்கு சில தினங்கள் தங்கி இருந்து மனிஷ் குறித்த தகவல்களை அம் மாநில போலீசார் உதவியுடன் திரட்டி பின்னர் மணிஷை கைது செய்து விமான மூலம் இன்று சென்னைக்கு அழைத்து வந்து பின்னர் சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.