தன் மகனுக்காக 30 ஆண்டுகள் கழித்து பழிக்கு பழி வாங்கிய தந்தை : உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட தம்பதி!!

416

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் மகனின் மரணத்திற்கு பழி வாங்க, 30 ஆண்டுகளுக்கு பின் கணவன் – மனைவியை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நாயர்(70). கடந்த 1993ஆம் ஆண்டு இவரது மகன் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பியதால் சசிதரன் அதற்காக பல நிறுவனங்களையும், ஆட்களையும் தேடி அலைந்துள்ளார்.

ஒரு வழியாக அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பிரபாகரன் குரூப் (60) என்பவர் சசிதரனின் மகனுக்கு பஹ்ரைனில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதற்காக கணிசமான தொகையையும் அவரிடம் இருந்து பிரபாகரன் பெற்றுள்ளார்.

கிளார்க் வேலை தயாராக இருப்பதாக கூறி ரமேஷை பஹ்ரைனுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். ஆனால், அங்கு அவருக்கு கொடுக்கப்பட்டது பணியாள் வேலை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

உடனே பிரபாகரனை சந்தித்து இதுகுறித்து சசிதரன் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனை அறிந்த ரமேஷ் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

தங்கள் ஒரே மகனை இழந்ததால் சோகத்தில் இருந்த சசிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நீதி மன்றத்தில் 29 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. தனக்கு நீதி கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த சசிதரனுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளித்தது.

பிரபாகரன் மீது தவறு இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் மனம் நொறுங்கிப்போன சசிதரன் விபரீத முடிவை எடுத்தார். பிரபாகரனை சரமாரியாக சுத்தியலால் தாக்கிய அவர், பெட்ரோலை எடுத்து பிரபாகரன் மற்றும் அவரது மனைவி விமலா குமாரி இருவர் மீதும் ஊற்றி தீ வைத்தார். இருவரும் தீப்பற்றியதில் அலறித் துடித்தனர்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து தம்பதியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். பிரபாகரன் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.