வவுனியாவில் சீனாவால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 158900 கிலோ அரிசி : மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு!!

546

சீன அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சத்து 58900 கிலோ அரிசி வவுனியாவில் நீண்ட நாளாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை விநியோகிக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பாடசாலை செல்லும் தரம் 5 இற்கு உட்பட்ட மாணவர்களின் பசியை போக்கும் முகமாக சீன அரசாங்கத்தால் ஒரு மாணவருக்கு 10 கிலோ வீதம் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரிசியானது வடமாகாணத்தில் வடமாகான கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் மேற்பார்வையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 4 இலட்சத்து 15450 கிலோ அரிசியும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒரு இலசத்து 13720 கிலோ அரிசியும்,

மன்னார் மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து 7160 கிலோ அரிசியும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு இலசத்து 5370 கிலோ அரிசியும், வவுனியா மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து 62570 கிலோ அரியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த அரிசி அந்தந்த மாவட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மாணவர்களுக்கு விநியோகிப்பட்டு இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தில் குறித்த அரிசி இதுவரை விநியோகிக்கப்படவில்லை.

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஓமந்தையில் உள்ள களஞ்சியசாலையில் குறித்த அரிசியில் ஒரு இலட்சத்து 58900 கிலோ கொண்டு வரப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு ஒரு மாதம் நெருக்கும் நிலையில் அவ் அரிசி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

புது வருடத்திற்கு கூட குறித்த அரிசி கிடைக்கவில்லை எனவும், அவை களஞ்சியப்படுத்தி நீண்டகாலம் வைத்திருந்தால் பழுதடைந்து விடும் எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பெற்றோர் கோரியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் சு.ஜெகசோதிநாதனிடம் கேட்ட போது, மாணவர்களுக்கான அரிசி விநியோகம் வடமாகாண கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

எமது மாவட்டத்தில் அதனை வழங்குமாறு எம்மிடம் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்கான அரிசி எமது சங்கத்தின் ஓமந்தை களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அரிசி விநியோகத்திற்கான மாணவர்களது பெயர் பட்டியில் வடமாகாண கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திடம் இருந்து பாடசாலை விடுமுறை விடுவதற்கு முதல் நாளே எமக்கு கிடைத்தமையால் எம்மால் வழங்க முடியவில்லை. பாடசாலை ஆரம்பித்ததும் அதனை வழங்குவோம் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடமாகாண பலநோக்கு கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் இ.அ.ஆனந்தராஜா விடம் கேட்ட போது,
வடக்கில் கொண்டு வரப்பட்ட அரிசியில் ஏனைய மாவட்டங்களில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் இதுவரை விநியோகிக்கவில்லை. எமக்கு பெயர்ப் பட்டியல் முன்னரே கிடைத்திருந்தது. ஆனாலும் சீரற்ற காலநிலை காரணமாகவும், போக்குவரத்து பிரச்சனை காரணமாகவும் பாடசாலை ரீதியாக கொண்டு சென்று உடனடியாக வழங்க முடியவில்லை.

அதற்கான ஏற்பாடுகளை சீர்செய்த போது பாடசாலை விடுமுறை விட்டுள்ளது. அதனால் எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் வவுனியாவில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாக பாடசாலை ரீதியாக விநியோகம் இடம்பெறும் எனத் தெரிவித்தார்.