வவுனியாவில் அரச ஊழியர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றனர்!!

639

அரச ஊழியர்கள்..

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2023 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (02.01.2023) காலை 9 மணிக்கு,

மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திரவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் இராணுவ வீரர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுவருட சத்தியபிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் செய்து கொண்டனர். தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், இராணுவ தளபதி , கடற்படை தளபதி, அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.