வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு : 5 கட்சிகளும் பங்கேற்பு!!

610

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு..

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின், வவுனியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுக கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (25.01) மாலை ஈபிஆர்எல்எப் கட்சியின் உயர் பீட உறுப்பினர் க.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த அறிமுக கூட்டத்தில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசிவசக்தி ஆனந்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த 5 கட்சிகளும் எதற்காக ஒன்றிணைந்து இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக குத்துவிளக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.