திருமணத்திற்கு சீர் வரிசையாக பழைய பீரோ : மணமகன் எடுத்த விபரீத முடிவுக்கு மணமகள் தக்க பதிலடி!!

533

இந்தியாவில்..

திருமணத்தின்போது பழைய பீரோவை சீர்வரிசையாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், திருமணத்தை நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் திருமண நிகழ்வின்போது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு பழக்கமாக இருந்தது, நாளடைவில் கலாச்சாரமாக மாறியது.

மேலும் இது கட்டாயமாக்கவும்பட்டது. இந்த வரதட்சணை கொடுமை காரணமாக பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். பல குடும்பங்கள் சீர்குலைத்து போயுள்ளது. பல பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும் பெண்களை மாப்பிள்ளை வீட்டார் கொலை செய்யவும் செய்கின்றனர்.

இதனால் இந்தியாவில் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தால் பல பேர் தண்டனை அனுபவித்து வந்தனர். வருகின்றனர். இருப்பினும் வரதட்சணை கொடுமை இன்னும் நீங்கவில்லை. தெலுங்கானாவில் தற்போது அதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது இளைஞர். பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் நேற்றைய முன்தினம் நடைபெறவிருந்தது.

எனவே திருமண ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி திருமண நிகழ்வின்போது மணமகள் வீட்டார் உறவினர்கள் என அனைவரும் வந்து நிற்க, மாப்பிள்ளை வீட்டார் திருமண நிகழ்விற்கு வர மறுத்துள்ளார்.

காரணம் பெண் வீட்டார் சீர்வரிசையில் பிரிட்ஜ், பாத்திரங்கள், நகைகள் உடன் பழைய பீரோவை வைத்துள்ளனர். எனவே அவர்கள் வர மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெண்ணின் தந்தை மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.

அப்போது மாப்பிள்ளை வீட்டார், “நாங்கள் கேட்ட சீர்வரிசை பொருட்களை நீங்கள் தரவில்லை. நீங்கள் கொண்டு வந்த பொருட்களான மெத்தை, கட்டில் ஏற்கனவே பயன்படுத்தியது போல் பழையதாக உள்ளது. எனவே எங்களால் வர இயலாது” என்றனர்.

பின்னர் மணப்பெண்ணின் தந்தை, சீர்வரிசை பொருட்களை புதிதாக வாங்கி தருவதாகவும், திருமணத்தை நிறுத்த வேண்டாம் எனவும் கண்ணீருடன் மன்றாடி கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் அவர்கள் அதனை மதிக்காமல், அநாகரீகமாக பேசி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி மணமகள் வீட்டார், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பழைய பீரோவுக்காக திருமணத்தை நிறுத்தியதால், புது பீரோவை பெண் வீட்டார் வாங்கியுள்ளனர். ஆனால் மாப்பிள்ளையை திருமணம் செய்ய பெண் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.