வவுனியா நெடுங்கேணியில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை ஆரம்பம்!

699

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தில் மாணவர்களுக்கான இலவச பேருந்து போக்குவரத்து சேவை கடந்த 20.02.2022 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வரும் நிலையில் தொடர்ச்சியாக இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் தொடர் பேசுபொருளாகவும் இருந்து வந்ததது.

இதன் முதற்கட்டமாக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.லெனின் அறிவழகன் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.இ.பிரதாபன் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக வவுனியா வடக்கு நெடுங்கேணி கூட்டுறவு சங்கத்தின் பேருந்து பாடசாலை சேவையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி சேவையின் மூலம் ஊஞ்சல் கட்டி, வெடி வைத்த கல்லு,பட்டிகுடியிருப்பு,காஞ்சிர மோட்டை, கற்குளம், பட்டடைப்பிரிந்தகுளம்,மருதோடை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நெடுங்கேணி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகை தரும் 83 மாணவர்கள் பயனடையும் வகையில் இலவசமாக இப்பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கான பருவ கால சீட்டும் நெடுங்கேணி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தால் வழங்கி வைக்கப்படுள்ளது.

மேற்படி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவைக்கான நிதி அனுசரணை நெடுங்கேணி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஜெர்மனியில் வசித்து வருபவருமான திரு.நவராசா என்னும் அன்பரால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.