காதல் தோல்வி.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு: தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!!

1210

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் அடுத்த கோதாவரி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தி. இவரது மகள் ஹேமபிரியா. இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமா நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஹேமபிரியா கல்லூரியில் கௌதம் என்ற மாணவனைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கௌதமுக்கும், ஹேமபிரியாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் காதல் தோல்வியால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் ஹேமபிரியா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியே தற்கொலைக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.