திருமணமான 3வது நாள் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!

272

சத்தீஸ்கரில்..

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமான 3 வது நாளில் புதுமண தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜ்நகர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லாம். 24 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான ககாஷா பானு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது திருமணம் அதே ஊரில் நடைபெற்று உள்ளது. இதில் இரு வீட்டார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர்.

இதனையடுத்து இருவருக்கும் திருமண வரவேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) வரவேற்பு நடத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இதற்காக நேற்று இரவு இருவீட்டாரும் பணிகளில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர். அப்போது, வெகு நேரமாகியும் புதுமண தம்பதி தங்களது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டியிருக்கின்றனர்.

கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்ததை அறிந்த உறவினர்கள், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது ஒருகணம் உறைந்துபோய் நின்றுவிட்டனர். புதுமண தம்பதிகளான அஸ்லாம் மற்றும் ககாஷா பானு ஆகிய இருவரும் படுகாயத்துடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக இதுகுறித்து திக்ராபாரா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மரணமடைந்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

ஆகவே, இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர். புதுமண தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும் இதுகுறித்த முழுமையான விசாரணை நடைபெற்ற பிறகே உண்மை தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமணமான 3 நாளில் புதுமண தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ராய்பூர் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.