சென்னையில்..
காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ( 29 ). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் தனது தாய் பார்வதியை பார்க்க சென்று உள்ளார்.
அங்கு அவர் அருகில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான முகமது முஷீத் (24), நசருல்லா (27) ஆகியோர் மது போதையில் அங்கு வந்தனர்.
அவர்கள் பிரவீனிடம் ஓசியில் சிகரெட் வழங்குமாறு கேட்டு உள்ளனர். அவர் அதற்கு தன்னிடம் சிகரெட் இல்லை என கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலானது.
இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அது மட்டுமில்லாமல் அருகில் இருந்த கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த முஷீத், நசருல்லா தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனின் மார்பில் குத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயம் அடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து எண்ணூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு தலைமறைவாக இருந்த முகமது முஷீத், நசருல்லா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் எண்ணூர் காவல் நிலையத்தில் உள்ளது. கொலைக்கு வேறு ஏதும் காரணமா ? என்ற கோணத்திலும் கைதான 2 பேரிடமும் எண்ணூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.