மரணத்திலும் ஒன்று சேர்ந்த தம்பதி…கணவன் உயிரிழந்த சிலமணி நேரத்தில் மனைவிக்கு சேர்ந்த சோகம்!!

262

கும்பகோணத்தில்..

கும்பகோணம் அருகே கணவர் உயிரிழந்த கொஞ்ச நேரத்தில் மனைவியும் மரணம் அடைந்த சம்பவம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய வயது 85.

விவசாய வேலைகளை பார்த்து வந்த இவருக்கு இந்த கிராமத்தில் உள்ள தோப்புதெருவில் சொந்த வீடு இருக்கிறது. இவருடைய மனைவி சரோஜா. 75 வயதான இவர் தனது கணவருக்கு வாழ்க்கை முழுவதும் பக்கபலமாக இருந்து வந்திருக்கிறார். இந்த தம்பதிக்கு கிரிஜா, உமா மற்றும் புவனேஸ்வரி என மூன்று மகள்கள் உள்ளனர்.

மூவருக்கும் திருமணம் ஆன நிலையில் தங்களது கணவர்களுடன் தனித்தனியாக மூவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கலியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சரோஜா மட்டும் இன்னம்பூர் கிராமத்தில் வசித்து வந்திருக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வயது மூப்பு காரணமாக கலியமூர்த்தியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடைய நேற்று கலியமூர்த்தி மரணம் அடைந்திருக்கிறார். வாழ்க்கையின் பல்வேறு அங்கங்களில் தனக்கு துணையாக இருந்த தனது கணவர் மறைந்து விட்டதை அறிந்த சரோஜா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்த அவர் மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அங்கிருந்த அனைவரும் அவரை எழுப்பி இருக்கின்றனர்.

ஆனால் இந்த பலனும் இல்லை. சரோஜா மரணம் அடைந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் பேரதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். கணவர் இறந்த கொஞ்ச நேரத்தில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதனை அடுத்து அந்த கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மரணத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத கலியமூர்த்தி சரோஜா தம்பதியின் அன்யோன்யத்தை அனைவரும் அறிந்து நெகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் கும்பகோணம் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.