குழந்தையுடன் கடலில் குதித்த இளம்பெண்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

330


கன்னியாகுமரியில்..



கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள வெட்டுமடை கடலில் நேற்று இளம்பெண்ணின் உடல் மிதந்துள்ளது. இதை பார்த்த இளைஞர் ஒருவர் அதிர்ச்சி அடைந்து பின்னர், அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.



மேலும் இது குறித்து குளச்சல் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை மீட்டு, இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணையை தொடங்கினர்.




போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடையை சேர்ந்த மெல்பின் (37), வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மெர்ஜித் என்ற மகன் இருந்தான்.


இந்தநிலையில் நேற்று சசிகலா தனது குழந்தை மற்றும் தாயாருடன் ஒரு ஆட்டோவில் காப்புக்காட்டில் உள்ள ஒரு இடத்தில் ஜோதிடம் பார்க்க சென்றார். பின்னர் தாயாரை வீட்டுக்கு அனுப்பி விட்டு அவர் தனது குழந்தையுடன் அதே ஆட்டோவில் மண்டைக்காடு பகுதிக்கு வந்தார்.

அப்போது ஆட்டோவில் இருந்தப் படியே மதிய உணவு அருந்திய சசிகலா, ஆட்டோ ஓட்டுநரிடம் கையை கழுவி விட்டு வருவதாக கூறி விட்டு குழந்தையுடன் கடலை நோக்கி சென்றார்.


அதன் பின்பு நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்ப வரவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர் பதற்றத்திற்குள்ளானார். டிரைவர் மாற்றுத்திறனாளி என்பதால் ஆட்டோவில் இருந்து இறங்கி அவர்களை தேட முடியவில்லை.

இதனால் அங்கு வந்த ஒரு இளைஞரிடம் நடந்ததை கூறி இருவரையும் தேட சொல்லியுள்ளார். அதன் பின்னரே அந்த இளைஞர் அப்பெண்ணை சடலமாக மீட்டுள்ளார். அதே நேரத்தில் குழந்தையை காணவில்லை. இதனால் குழந்தையும் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனால் கடலோர காவல் குழும போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையுடன் கடலில் குதித்து சசிகலா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

குழந்தையுடன் கடலில் குதித்து சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.