கொலையில் முடிந்த பெண்களின் குழாயடி சண்டை.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!!

383

கரூரில்..

கரூரில் பெண்களின் குழாயடி சண்டையில் தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து எதிர் வீட்டு நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ, பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.

அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வாய் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சண்டை குறித்து கார்த்தியின் மனைவி, கார்த்தியிடம் அழுது கொண்டே புகார் சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு கோபம் அடைந்த கார்த்தி, இளங்கோவனின் வீட்டிற்கு சென்று தான் கொண்டு வந்திருந்த கசாப்பு கடை அரிவாளால் இளங்கோனையும், அவரது மனைவி பத்மாவதியையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இளங்கோவனுக்கு கையிலும், பத்மாவதிக்கு தலையிலும் பலமாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் காவல் துறையினர் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், தப்பி ஓடிய கசாப்பு கடை உரிமையாளர் கார்த்தியை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.