சொத்துக்காக தாய் மீது காரை ஏற்றிய பாசக்கார மகன்.. தாயின் பரிதாப நிலை!!

295

தென்காசியில்..

மனிதர்களிடையே மனிதம் மறைந்து போய் ரொம்ப காலம் ஆகிறது. ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி என்பார்கள். இப்போதெல்லாம் கணவன், மனைவி, தந்தை, தாய், மகன், மகள் என்று யாரையும் எதிர்பார்ப்பதில்லை.

மேலை நாடுகள் எல்லாம், இந்தியர்களின் பாரம்பரியமும், குடும்ப பிணைப்பையும் பார்த்து பிரமித்த காலங்கள் மலையேறி விட்டது. அவர்கள் மெல்ல மெல்ல குடும்பம், பாசம் என்று திரும்பி கொண்டிருக்கையில், நாம் பணத்தை நோக்கி பேராசையுடன் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

கூட்டுக் குடும்பங்கள் தனிக் குடும்பங்களாக உருமாறி, இப்போது சிங்கிள் பேரெண்ட் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் நிலையில் உள்ளது நம் சமூகம். பெற்ற தாய் மீதே காரை ஏற்றி, சொத்துக்காக மகனே கொலைச் செய்த சம்பவம் தென்காசியை அதிர செய்துள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள அச்சன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவில் சங்கரநாராயணன்- முருகம்மாள் (62) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), ராம்குமார், உதயமூர்த்தி (38) என்று 3 மகன்கள் உள்ளனர். சங்கர நாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் முருகம்மாள் தனது கடைசி மகன் உதயமூர்த்தியுடன் பைக்கில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். அச்சன்புதூர்-சிவராம்பேட்டை சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் முருகம்மாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உதயமூர்த்தி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் அசுரவேகத்தில் சென்றுவிட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், காயத்துடன் போராடிய உதயமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகம்மாளின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். அப்போது, அது விபத்து இல்லை என்பதும், சொத்து தகராறில் முருகம்மாளை அவரது மூத்த மகன் மோகன்தான் காரை ஏற்றி கொலை செய்தார் என்றும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

மோகனுக்கும், அவரது தாய் முருகம்மாளுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. குடும்ப சொத்து தொடர்பான வழக்கு செங்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மேலும், சங்கரநாராயணன் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவை தொடர்பான வழக்கில் இன்சூரன்ஸ் தொகையை முருகம்மாள் மற்றும் அவரது 3 மகன்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த பணத்தை வழங்குவதிலும் மோகனுடன் பிரச்சினை இருந்து வருகிறது.

மோகனுக்கு சொத்தும் கிடையாது, பணமும் கிடையாது என்று அவரது தாயார் முருகம்மாள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மோகன் அடிக்கடி தனது தாயாருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆத்திரத்தில் இருந்த அவர் முருகம்மாள், உதயமூர்த்தி இருவரும் பைக்கில் சென்றபோது காரை ஏற்றி முருகம்மாளை கொலை செய்துள்ளார், என விசாரணை நடத்திய போலீசார் கூறுகின்றனர். மேலும் தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.