வவுனியாவில் மர்மமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை!!

3261

சட்டவைத்திய பரிசோதனை..

வவுனியாவில் மர்மமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை நேற்றையதினம் (08.03.2023) இடம்பெற்றிருந்தது.

பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. மரணித்தவர்களினது இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் மாதிரிகளுக்கான பரிசோதனை முடிவு வந்ததன் பின்னரே மரணத்திற்கான காரணம் என்னவென தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும் என சட்டவைத்திய பரிசோதனை அறிக்கையுள்ளது.

வவுனியா குட்செட்வீதி, உள்ளகவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் நேற்றுமுன்தினம் (07.03.2023) மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42), வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9), கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிசார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது. குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.