அடித்து கொல்லப்பட்ட பள்ளி மாணவன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

380

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்துள்ள தோளூர்ப்பட்டியை சேர்ந்தவர் கோபி, இவருக்கு திருமணமாகி பெரியக்காள் என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் மெளலீஷ்வரன் தொட்டியம் அடுத்துள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவன் மெளலீஷ்வரன் சக மாணவர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது மெளலீஸ்வரனுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாணவன் மௌலீஸ்வரன் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மௌலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த மௌலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு தொட்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், மாணவனின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவனின் உடல் பிரேத பரிசோதனையின் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மாணவனின் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனை செய்யும் அறையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர்கள் சம்மதத்தினர். இதனையடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.

பள்ளி வளாகத்தில் மாணவன் உயிரிழந்த நிலையில் முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதுகாப்பு பணிக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.