காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு.. தந்தையை குத்திக்கொன்ற மகன்!!

272


அரியலூரில்..



அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கருப்பிலாக்கட்டளை கிராமத்தில் அர்ச்சுனன் (48) என்பவர் வசித்து வந்தார். விவசாயியான இவரது மனைவி இறந்து விட்டதால், 2 மகன்கள், 3 மகள்களுடன் வசித்து வந்தார்.



இதில் இளைய மகன் அருண் (24) திருப்பூரில் வேலை பார்த்தபோது கடந்த ஆண்டு அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அருண் தனது காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.




இவர்களது காதல் திருமணம் அர்ச்சுனனுக்கு பிடிக்கவில்லை. ஒரு அக்கா, அண்ணன் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் நீ எப்படி திருமணம் செய்து கொண்டாய் என கேட்டு மகனிடம் கேட்டு தகராறு செய்தார்.


பின்னர் நேற்று முன்தினம் இரவு போதையில் வந்து மகனிடம் காதல் திருமணத்தை தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த அருண் வீட்டில் இருந்த கத்தியால் தந்தையை சரமாரி குத்தினார்.

இதில் அர்ச்சுணனின் கழுத்து, தலையின் பின்புறம் மற்றும் முகத்தில் சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இதனால் அதிக ரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி அருணை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.