இரவு உயிரிழந்த தந்தை.. காலையில் கனத்த இதயத்துடன் தேர்வுக்கு போன மாணவன்!!

337

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை அடுத்த கல்லாவி கீழ் காலனி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் சமீபத்தில் நோய் வாய்ப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே அவரது மகனான ஜெகத், கல்லாவி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தொழில் பிரிவில் படித்து வந்துள்ளார். மேலும் பிளஸ் டூ மாணவர்களுக்காக தற்போது அரசு பொதுத் தேர்வு நடந்து வரும் சூழலில் ஜெகத்தும் மிக தீவிரமாக தயாராகி தேர்வுகள் எழுதி வந்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில் தான் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ஜெகத் குடும்பத்தில் அரங்கேறி உள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை கோடீஸ்வரன் திடீரென மரணித்தது அவரையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.

இதற்கிடையே மறுபபக்கம் பொதுத்தேர்வு நடந்து வந்த சூழலில், ஆங்கிலத் தேர்வு எழுதுவதற்காக மறுநாளே பள்ளிக்கு செல்லவும் ஜெகத் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற ஜெகத்தை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆறுதல் தெரிவித்து தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தந்தை உயிரிழந்த துக்கம் ஒரு பக்கம் இருந்த சூழலில், மகன் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற தந்தையின் கனவையும் நிறைவேற்ற வேண்டுமென்றும், தனது படிப்பும் வீணாக கூடாது என்ற காரணத்தினாலும் தேர்வு எழுத வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுடன் மட்டுமில்லாமல் நிச்சயம் மாணவன் ஜெகத் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தனது தந்தைக்கு பெருமை சேர்ப்பார் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.