வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் மரணம் தொடர்பான உடல் பகுபாய்வு முடிவுகள் கிடைப்பதில் தாமதம்!!

3186

பகுப்பாய்வு பரிசோதனை முடிவுகள்..

வவுனியா, குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகளின் பகுப்பாய்வு பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் வவுனியா பொலிசார் நேற்று (18.03) தெரிவித்தனர்.

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த 7 ஆம் திகதி காலை தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 42 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை கடந்த 08 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த பகுப்பாய்வு பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும், அது கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் முறையான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும், குறித்த மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லை எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.