மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்.. போதையில் நடந்த விபரீதம்!!

427

சென்னையில்..

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பிரேம்குமார் (37)- கோமதி (35) தம்பதி வசித்து வந்துள்ளனர். திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

பிரேம்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்கதையாகி வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி குடித்துவிட்டு வந்த பிரேம்குமார், வழக்கம்போல் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுத்தக்கொள்ள முடியாத மனைவி கோமதி புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் பிரேம்குமாரை அழைத்து விசாரித்து, இருவரையும் சமாதானப்படுத்தி, பிரேம்குமாரை எச்சரித்து அனுப்பினர். பின்னர் வீட்டிற்குச் சென்ற பிரேம்குமார், கோமதியுடன் மீண்டும் சண்டைபோட்டு அவரை அடித்துள்ளார்.

அப்போது கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமதி மயங்கி கீழே விழுந்தார். பின்னர் பிரேம்குமார் அங்கிருந்து சென்று விட்டார். அப்போது வீட்டிற்கு வந்த கோமதியின் தாய், மகளை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கோமதியின் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கோமதி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கொலை வழக்காக மாற்றி பிரேம்குமாரை கைது செய்தனர்.