மகள் இறந்த சோகத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பம்!!

395

உலகநாதபுரத்தில்..

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் உலகநாதபுரம் பகுதியில் வீரையா (50), சித்ரா (45) தம்பதி வசித்து வந்தனர். இதில் வீரையா கோழி இறைச்சி கடையொன்றில் டிரைவராக வேலைச் செய்து வருகிறார்.

இவர்களுக்கு கிஷோர்குமார் (24), திலீப்குமார் (19) என்ற இரு மகன்களும், அஷ்டலட்சுமி (21) என்ற மகளும் உள்ளனர். இதில் கிஷோர் குமார் நடன பயிற்சியாளராக உள்ளார். ஒரு மகனுக்கு திருமணமாகி தனியாக வசிக்கிறார்.

அதே நேரம், திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேஷன் டிசைனிங் படித்து வந்த அஷ்டலட்சுமி காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரையா தனது மகளை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

இதன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டுக்கு பிறகு அஷ்டலட்சுமி கல்லூரிக்கு செல்லவில்லை. மேலும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட சித்ரா, “தனது மகளுக்கு நேரம் சரியில்லை.

அவளுக்கு செய்வினை கோளாறு இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு பிறகு எல்லாம் சரியாகி விடும். டாக்டரிடம் மகளை அழைத்து செல்ல வேண்டாம் என்று கணவரிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சித்ரா, அஷ்டலட்சுமி, திலீப்குமார் ஆகியோர் மட்டும் இருந்தனர். இரவு 3 பேரும் சாப்பிட்டதும், திலீப்குமார் நள்ளிரவு 11 மணி அளவில் தூங்க சென்று விட்டார்.

அப்போது, சித்ரா, தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று காலை 5.30 மணி அளவில் திலீப்குமார் எழுந்து பார்த்த போது, அஷ்டலட்சுமி படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சித்ரா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இது பற்றி அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் வீரையாவின் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அஷ்டலட்சுமி உடல் நலக்குறைவால் இறந்து விட்டதும், மகள் இறந்த துக்கம் தாங்காமல் சித்ரா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.