வவுனியா பொலிசாரால் 20 வயது இளைஞன் கைது : கொழும்பில் இருந்து சூட்சுமமான வரவைத்த பொலிசார்!!

2149

இளைஞன் கைது..

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (02.04) தெரிவித்தனர்.

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் வங்கியில் வைப்புச் செய்வதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக விற்பனை நிலைய உரிமையாளரால் கடந்த புதன் கிழமை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி கொழும்பு சென்றிருந்த இளைஞர் ஒருவரை பொலிசார் சூட்சுமமான முறையில் வவுனியாவிற்கு வரவழைத்து வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த பணத்தில் 9 இலட்சம் ரூபாய் இளைஞனின் வங்கியில் உள்ளதாகவும், மிகுதி 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விட்டதாகவும் தெரிவித்ததாக பொலிசார் கூறினர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.